அமரர் தொண்டமானின் சகல கோரிக்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றும்

மக்கள் மனதில் நஞ்சை விதைக்காது நேர்மையுடன் பணியாற்றிய தலைவரென பிரதமர் புகழாரம்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்த மண்ணை விட்டுப் பிரிந்த போதும் அவரது பிரார்த்தனைகளை எம்மிடம் கையளித்துவிட்டே சென்றிருக்கின்றார்.

அவர் மரணிக்கும் தினத்தில் என்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அனைத்து விடயங்க ளையும் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக்கின்றேன். அதனை நாங்கள் நிறைவேற்றுவோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன்தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நேற்று பூரண அரச அனுசரணையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்களென பெருமளவிலானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் இரங்கல் உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

தொண்டமான் பரம்பரையினர் பொய் நியாயங்களை கற்பித்து மக்களை ஏமாற்றியவர்களல்ல. மலையக மக்களுக்காகவே தன்மை அர்ப்பணித்து மக்கள் தலைவர்களாகவே அவர்கள் திகழ்பவர்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்;

கடந்த 28 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். அமைச்சர் அமரர் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவரது ஆழ்ந்த அனுதாபங்களை நாட்டு மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பற்றி குறிப்பிடும்போது, அவர் இந்தியாவின் நண்பர் என குறிப்பிட்டார். அதேபோன்று பல்வேறு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.

தொண்டமான் என்பது மலையக மக்கள் மத்தியில் மரமும் மரப்பட்டையும்போன்று பிணைந்து வாழ்பவர்கள். மக்களோடு இணைந்த உறவு அவர்களுடையது. ஆறுமுகன் தொண்டமானின் பாட்டனாரான சௌமியமூர்த்தி தொண்டமான் நாம் அனைவரும் நன்கறிந்தவர்.

அக்காலத்தில் தொழில் அமைச்சர் என்ற வகையில் நான் அவருடன் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன்.

தொண்டமான் குடும்பம் அரசியலை குறுகிய நோக்கமாக கொள்ளவில்லை. அவர்கள் மக்களுக்கு சேவை செய்தார்கள். அரசாங்கம் என்பது நம் அனைவரதும் அரசாங்கம் என்ற நோக்கத்துடன் செயற்பட்டவர்கள். அவர்கள் எப்போதும் தம் மக்களுக்கு சேவை செய்வதையே முன்னின்று மேற்கொண்டார்கள்.

2005 ஆம் ஆண்டு ஆறுமுகன் தொண்டமான் எமது அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார். அதேபோன்று அவரது பாட்டனாரான சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் பிரஜாவுரிமை உட்பட பல்வேறு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர். அதேபோன்று மலையக மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கையளித்துச் சென்றார்.

2005 காலகட்டங்களில் அரசாங்கத்தின் அனுசரணையோடு மலையகப் பிரதேசங்களில் பாதைகள் பாடசாலைகளென பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றதுடன் வீட்டு வசதிகள் மற்றும் மின்சார வசதிகளும் பெற்று கொடுக்கப்பட்டன.

கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது தோட்ட இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர். அந்த போராட்டம் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது.

1940இல் முல்லோயா தோட்டத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி மேற்கொண்ட போராட்டத்தை விட மேற்படி இளைஞர்களின்போராட்டம் முன்னேற்றம் அடைந்திருந்தது.

அந்த வகையில் மலையக இளைஞர்களின் இந்தளவு முன்னேற்றத்திற்கு பாதை வகுத்துக் கொடுத்தவர் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்தான். பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராளுமன்றம் சென்று அதிகாரத்தை பெற்றுக்கொண்டு இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகளையும் நாட்டுக்கு எதிராக உலகளவில் விமர்சனங்களை மேற்கொள்வதில் ஈடுபட்டவர்களுக்கும் உதவியளித்தே பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றனர்.

எனினும் தொண்டமான் பரம்பரையினர் ஒரு போதும் பொய் நியாயங்களைக் கற்பித்து மக்களை ஏமாற்றவில்லை.

அதனால் தான் மலையகத்தில் இரத்த ஆறு ஓடவில்லை. அதனால் தமது மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்வதற்கு அவர்களால் முடிந்தது. மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சேவை செய்வதற்கு அவர்கள் தம்மை அர்ப்பணித்திருந்தார்கள்.

ஆறுமுகம் தொண்டமான் பரம்பரையினர் தமது பிரதேசத்தில் மத வழிபாட்டுத் தலங்களை பிரச்சினையாக்கிக் கொள்ளவில்லை. அவற்றை தமது பிரதேசங்களிலிருந்து அகற்ற வேண்டுமென தமது மக்கள் மத்தியில் நஞ்சை விதைக்கவில்லை. அந்தவகையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மலையகப் பிரதேசத்தில் பெருமளவிலான பௌத்த விகாரைகளுக்கும் நிதி உதவி வழங்கியுள்ளார். அதனால்தான் அவர் மக்கள் மனதில் நிற்கும் தலைவராக இருந்தார்.

ஆறுமுகம் தொண்டமான் எப்போதும் மலையக மக்களை எமது மக்கள் என்றே விளிப்பார். அவர் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு சொல்லைப் பயன்படுத்தவில்லை. அதனால் ஆறுமுகம் தொண்டமான் எமது தலைவர். அவர் மக்கள் தலைவர்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். எனது சார்பிலும் அரசாங்கத்தின் சார்பிலும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/01/2020 - 06:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை