மடு ஆடி மாத திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள்

மாவட்ட மட்ட கூட்டத்தில் தீர்மானம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவில் இம் முறை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களை அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மேலதிக அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பொலிஸ், இராணுவம், கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன் ஏற்பாடுகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள அடி மாத திருவிழாவின் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளதோடு சுகாதார நடைமுறைகளை பேணி திருவிழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

மன்னார் குறூப் நிருபர்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை