நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

அடிப்படையில் ஒன்றை ஒளித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர் தயாரில்லை. இந்த ஆழ்மன அச்சத்தில் இருப்பவர்கள் நீதியின் தீர்ப்பு வேறு விதமாக அமையுமென்று நம்பியிருந்திருக்கிறார்கள்.

ஆனாலும் நீதிமன்றம் நியாயத்தீர்ப்பை வழங்கியிருக்கிறதென கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,சரி பிழைகளுக்கப்பால் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு விரைவாக புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன் ஊடாக சீரழிந்து போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியமைக்க வேண்டும். சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாடு சீரான முறையில் நகரத்தொடங்கும்  அதேவேளை, ஏனைய தேசிய பிரச்சினைகளுக்கும் யதார்த்தமான வழிமுறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

ஸ்திரமான அரசு இருந்தால்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும்.ஆகவே முரண்பாடுகளுக்கப்பால் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்குத் தலைவணங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய நியாயத் தீர்ப்பைப் போலவே தேர்தலில் மக்கள் தீர்ப்பும் நியாயத்தீர்ப்பாக அமையுமென்பது உறுதியென அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

கே.அசோக்குமார்

Wed, 06/03/2020 - 08:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை