அமெரிக்காவின் பல இடங்களிலும், அந்நாட்டு வரலாற்றில் சர்ச்சைக்குரிய ஒருவராக இருக்கும் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் பிடியில் வைத்து உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட்டின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அடிமைத்துவத்துடன் தொடர்புபட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் சிலைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.
இதில் அமெரிக்காவை கண்டுபிடித்தவராக அழைக்கப்படும் கொலம்பஸின் சிலைகள் மூன்று இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் அவரது சிலை ஏரியில் வீசி எறியப்பட்டிருப்பதோடு மற்றொரு சிலையின் தலை துண்டிக்கப்பட்டு மற்றையது கீழே வீழ்த்தப்பட்டுள்ளன.
பழங்குடியினர் மீதான வன்முறைகள் மற்றும் அமெரிக்காவில் காலனித்துவத்தை விரிவுபடுத்தியது தொடர்பில் கொலம்பஸ் மீது வரலாறு நெடுகிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
அண்மைக் காலத்தில் பல நகரங்களிலும் கொலம்பஸ் தினத்திற்கு பதில் பழங்குடி மக்களின் தினம் கொண்டாடப்படுகிறது.
பழங்குடி மக்களுடனான ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலேயே கொலம்பஸின் சிலை இலக்குவைக்கப்படுவதாக சில ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மின்னிசோட்டா மாநிலத்தில் இருக்கும் கொலம்பஸ் சிலையை பேரணியாக வந்த குழு ஒன்று கயிறை கட்டி இழுத்து கழே வீழ்த்தியது.
விர்ஜினியா, பிர்ட் பூங்காவில் இருக்கும் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே வீழ்த்தி அங்குள்ள ஏரியில் எறிந்தனர்.
இதேவேளை பொஸ்டனில் உள்ள கொலம்பஸ் சிலையின்தலை துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அந்த சிலையை அகற்றினர்.
from tkn