யாழில் இதுவரை பத்தாயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ். கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொது மக்களின் காணிகளில் 10 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம் தொடர்பில் செயற்பட்டு வருகின்றார். அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள் முப்படையினருடன் நடைபெற்று வருகின்றது. எனவே, நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒரு முக்கியமான கூட்டமாக எனக்கு தென்படவில்லை.

ஏனெனில் கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்த கூட்டம் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது. எனவே இக் கூட்டத்தில் விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லை.

அதிலும் குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை. ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை