ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக் காலத்தை இன்னும் இரண்டு தவணைக்கு நீடிக்க வழிசெய்யும் அரசியலமைப்பு சீர்திருத்தம் மீதான வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் பங்கேற்றுள்ளனர்.
உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு திகதி வரும் ஜூலை 1 ஆம் திகதி என்றபோதும், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் ஒரு வாரத்திற்கு முன்னரே வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாக்கெடுப்பில் 10 நேர வலயங்களில் 110 மில்லியன் மக்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் புட்டினுக்கு வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக எதிர்த்தரப்பு செயற்பாட்டாளர் அலெக்சி நவல்னி தெரிவித்துள்ளார். எனினும் இது ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாக புட்டின் தெரிவித்துள்ளார். அதேபோன்று தமது தற்போதைய பதவிக் காலம் முடிவடையும் 2024 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி புட்டி இன்னும் வெளிப்படையாக எந்த அறிப்பையும் வெளியிடவில்லை.
இந்த அரசியலமைப்பு மாற்றத்தின் முக்கியமான ஓர் அம்சமாக ஜனாதிபதி பதவி தொடர்ச்சியான இரு தவணைக்கு பதில் மொத்தம் ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு தவணைக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இந்த மீட்டமைப்பு காரணமாக புட்டினுக்கு 2024க்கு பின்னரும் ஜனாதிபதி பதவியில் நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
67 வயதான புட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமராக கடந்த 20 ஆண்டுகளாக ரஷ்யாவில் ஆட்சியில் உள்ளார்.
from tkn