சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸாரால் முற்றுகை

கிளிநொச்சி கண்ணடவளை-பெரியகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாரிய மணல் அகழ்வு நடவடிக்கை முற்றுகையிடப்பட்டது. கிராம சேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக அப் பகுதிக்கு சென்ற விசேட குழுவினால் குறித்தத பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 100 லோட்டுக்கு அதிக மணல் கும்பிகள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கனகராயன் ஆற்றுப் பகுதி மற்றும் அதனை அண்டிய வயற்காணியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது தொடர்பில் பொது மக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரனிற்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக கிராமத்திற்கு பொறுப்பாக உள்ள கிராம சேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்தே நேற்று முன்தினம் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அப் பகுதியில் முறையற்ற வகையிலும் அனுமதியற்ற மணல் அகழ்வு இடம்பெற்று வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியில் சுற்றாடல் பாதிப்படையும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை உறுதி செய்யப்பட்டதையடுத்து கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை