லொறி மீது அதிவலு மின்கம்பி வீழ்ந்ததில் இருவர் பலி

- ஒருவர் அதிலிருந்து பாய்ந்து தப்பியுள்ளார்

மஹவெல பிரதேசத்தில் அதிவலு கொண்ட மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹஉல்பத, ஹதமுணகால பிரதேசத்தில் இன்று (06)  முற்பகல் 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது, அதிவேக மின் கம்பி அறுந்து வீழ்ந்துள்ளது. அவ்வேளையில் லொறியில் இருந்த மூவரில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றைய நபர், லொறியிலிருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளார். 

இச்சம்பவத்தில் மஹவெல, செலகம பிரதேசங்களைச் சேர்ந்த 23, 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அருகிலிருந்த பலா மரத்தின் கிளையொன்று, மின்கம்பி மீது வீழ்ந்ததை தொடர்ந்து,  அம்மின்கம்பி லொறி மீது அறுந்து வீழ்ந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மஹவெல பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Sat, 06/06/2020 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை