காயப்பட்ட மாணவனை சந்தித்தார் பந்துல
பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து பகிடிவதையை முற்றாக ஒழித்துக்கட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் காயமடைந்த மாணவர் பசிந்து ஹிருஷானின் உடல்நலம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டப் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பசிந்து ஹிருஷான் தமது மேலதிக கல்வியை தொடர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் அனைத்து நடவடிக்ைககளையும் எடுத்துள்ளனர்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அச்சமும் சந்தேகமும் இல்லாமல் தங்கள் கல்வியை தொடர முடிகிறது. மாணவர்களை பகிடி வதைக்குட்படுத்தவோ அல்லது தாக்குதல்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக கட்டமைப்பில் பகிடி வதைகளை முற்றாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பகிடி வதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகளின்படி ஏனைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn