புனித ஹஜ் கடமைக்கு செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை

ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தகவல்

2020ஆம் வருடத்திற்கு ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு இலங்கை ஹாஜிகளை புனித மக்கமா நகருக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித இறுதி முடிவுகளையும் இலங்கை ஹஜ் குழு எடுக்கவில்லையென அதன் தலைவர் மர்ஜான் பளீல் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரேபிய  ஹஜ் அமைச்சு கூட உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் வழங்கவில்லையென தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் இன்னும் சில நாடுகளும் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதில்லையென உறுதியாக அறிவித்துள்ளது.

சவூதி அரேபிய ஹஜ் அமைச்சினால் இது தொடர்பில் ஏதாவது அறிவிப்புகள் எமக்கு கிடைக்கப்பெற்றால் ஆராய்ந்து உறுதியான முடிவை எமது குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

இதுவரை 'கொவிட் 19' நோய் தாக்கத்தின் பாதிப்பினால் சவூதி அரேபியா கூட தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை ஒரு சில விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ளன.

அந்தவகையில், இவ்வருட ஹஜ் கடமை தொடர்பில் ஏதாவது முடிவுகள் எடுக்கப்பட்டால் அதனை எமது குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள் யாவும் சவூதி அரசினால் இடைநிறுத்தப்பட்டது தெரிந்ததே.

இம்முறை ஹஜ் ஏற்பாடுகளை பிரதமரின் வழிகாட்டலின் கீழ் ஹஜ் குழு முன்னெடுத்திருந்ததோடு குறைந்த கட்டணத்தில் யாத்திரிகர்களை அழைத்துத் செல்லவும் விசேட திட்டங்களை தயாரித்திருந்தது.

 

அஜ்வாத் பாஸி

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை