புதிய திட்டம் தொடர்பில் அரச அதிகாரிகள் ஆராய்வு

திண்மக்கழிவிலிருந்து எரிபொருள் ;

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளிலிருந்து மீள்சுழற்சி மூலம் மின்சக்தி மற்றும் எரிபொருட்களான பெற்றோல், டீசல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றுது.

கனடா அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இந்தியாவினூடாக கொழும்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது மட்டக்களப்பில் பரீட்சாத்த திட்டமாக நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது திண்மக்கழிவுகளிலிருந்து இத்திட்டத்தினூடாக மின்சக்தியையும் பெற்றோல் மற்றும் டீசலினையும் பெற்றுக் கொள்ளமுடியுமென டப்ளியூ. ரீ. டெக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான சந்தனம் பிச்சை விளக்கமளித்தார். அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை சூழலுக்குப் பாதிப்பின்றி முறையாக அகற்றுவதில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் திண்மக்கழிவுகளினூடாக சக்திகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கமுடியுமென அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் முதன்முதலாக அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த திட்டத்தை மட்டக்களப்பில் நடைமுறைப் படுத்தவிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான திட்ட வரைபு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சந்தனம் பிச்சை , நெவில் மெல்ரோய், அல்பிரட் சம்பத், டப்ளியூ. ரீ. டெக் நிறுவனத்தின் இணைப்பாளர் பீ. குமார ரத்னம், மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

--மட்டக்களப்பு குறூப், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை