பிரிட்டன் நாடுகாண் பயணியும் அவுஸ்திரேலியாவை அடைந்த முதல் ஐரோப்பிய கப்பலின் தலைமை மாலுமியுமான ஜேம்ஸ் குக்கின் சிலையில் கிறுக்கி சேதப்படுத்திய இரு பெண்கள் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிட்னி நகரின் ஹைட் பார்க் பூங்காவில் உள்ள குக்கின் சிலையை சேதப்படுத்தியதாக முறைப்பாடு கிடைத்த நிலையில் 20 வயதுகளில் இருக்கும் இரு பெண்கள் அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த பையில் வண்ணப் பூச்சு போத்தல்கள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் சொத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொலிஸ் பிடியில் கறுப்பினத்தவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் பரவி இருக்கும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அடிமைத்துவம் தொடர்பிலான சிலைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் காலனித்துவத்தின் அடையாளமாக இருக்கும் ஜேம்ஸ் குக்கின் சிலைகளை அகற்றக் கோரும் குரல்கள் அவுஸ்திரேலியாவில் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn