சஜித் அணியிலிருந்து மற்றுமொரு வேட்பாளரும் நேற்று வெளியேற்றம்

சஜித் அணியிலிருந்து மற்றுமொரு வேட்பாளரும் வெளியேறியுள்ளார். காலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலாங்கொடை தொகுதிக்கான வேட்பாளர் மேஜர் டெனட் பணியந்துவ நேற்று ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி பிரதமர் தலைமையிலான பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்.

முதுகெலும்பற்ற தலைவர்களுடன் இணைந்திருப்பது அர்த்தமற்றதென அவர் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட மேஜர் டெனட் பணியந்துவ பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் பலர் வெளியேறும் நிலை உருவாகியுள்ளதாகவும் அடுத்துவரக்கூடிய நாட்களில் இது நடைபெறலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய வருகின்றது.

 எம்.ஏ.எம். நிலாம்

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை