ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுமையாக சட்டபூர்வமானவையென உயர் நீதிமன்ற தீர்ப்பினூடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்த தீர்ப்பினூடாக எதிரணியின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,
கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்தினால் தேர்தல் நடத்த முடியுமென்ற கருத்து பெரும்பாலனவர்கள் மத்தியில் காணப்பட்டது. மிகச் சிறந்த முறையில் அதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்றன. இந்த நிலையில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றார்கள். எதிர்த்தரப்பு பிளவபட்டு வங்குரோத்து நிலையையடைந்துள்ளது. பாராளுமன்றமின்றி ஜனாதிபதி நாட்டை நிர்வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் முழுயைாக சட்டபூர்வமானவையென உயர்நீதிமன்ற தீர்ப்பினூடாக தெளிவாகிறது.எதிரணிக்கு சட்டத்தின் முன்பாக தமது நிலைப்பாட்டை முன்வைக்க முடியவில்லை.
தொற்று நோய் நிலைமையை சடத்தினூடாக கட்டுப்படுத்த முடியாது. இதனை எதிரணியால் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் சட்டபூர்வமாக நடைபெற்றுள்ளதாக உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியிருக்கிறது.
அரச கட்டமைப்பையும் முப்படை,சுகாதாரத் தரப்பு என்பவற்றையும் சிக்கலில் தள்ள எதிரணி முயன்றது. உயர் நீதிமன்ற தீர்ப்பினால் எதிரணியின் நிர்வாணம் அம்பலமாகியுள்ளது. வரலாற்று முக்கியமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் நீதிமன்றத்திற்கு சென்றார். சகல மனுக்களும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனரை்.ஹூல் ஆணைக்குழுவிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம்
from tkn