தேர்தல் முடிந்த கையோடு அரசுடன் விரிவான பேச்சு

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்;

'சவால்' அரசியல் நிகழ்ச்சியில் எம்.எஸ்.அமீர் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அச்சமயம் விரிவாக சுட்டிக்காட்டப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான எம். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசையில் நேற்று மாலை இடம்பெற்ற சவால் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கருத்துப்பட தெரிவித்தார். இந்த அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ், சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அண்மையில் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தமை தொடர்பாக கேட்ட போதே அமீர் அலி இவ்வாறு பதிலளித்தார். இந்நாட்டில் சிறுபான்மை இனங்களான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவற்றை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் இதுவரை முறையாக காணப்படவில்லை.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இப்பிரச்சினையை தீர்க்க முனைந்தாலும் அவை இன்று வரை தீர்க்கப்படாமலேயே உள்ளது.

எனவே இதற்கு ஒரு நிலையான தீர்வு காணப்படுவது அவசிய தேவையாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினைகளை நன்கு அலசி ஆராய்ந்து தீர்க்கக் கூடிய ஒரு வல்லமை பொருந்திய அரசாங்கமாக காணப்படுகின்றது.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழர் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை நன்கு விளங்கிக் கொண்டவராக காணப்படுகின்றார்.

எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் அவருடன் இந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அமீர் அலி தெரிவித்தார்.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை