பிரான்ஸில் தடையை மீறி சுமார் 20,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸார் கட்டுப்பாட்டில் இருந்த கறுப்பின வாலிபர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓரிடத்தில் பத்துப் பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற விதி பிரான்ஸில் நடப்பில் உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பாரிஸ் நீதிமன்றத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்தனர்.
பொலிஸ் காவலில் இருந்தபோது அடாமா டிராவோரெஸ் என்ற கறுப்பின ஆடவர் உயிரிழந்தார். அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து இருவேறு விதமான அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் பொலிஸார் இரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தினர். பிரான்ஸின் வேறு சில இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அடாமாவின் மரணம் தொடர்பில் பொலிஸாரின் வன்முறையைக் கண்டித்து பிரான்ஸில் நீண்ட நாட்களாகப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் என்ற கறுப்பினத்தவரின் மரணம் அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்திருக்கும் நிலையிலேயே பிரான்ஸிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn