15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டால், இரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 18-ம் திகதி முதல் நவம்பர் 15-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கிண்ண போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்கிறது.
இதற்கிடையே உலக கிண்ண போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்து இருந்தது. இதேபோல இந்த ஆண்டு உலகக் கிண்ண நடைபெற வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவருமான ஈசான் மானி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உலக கிண்ண நடைபெற்றால் இரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
உலக கிண்ணத்தில் விளையாட 15 நாட்டு வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் இரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இரசிகர்கள் இல்லாமல் உலக கிண்ணம் இல்லை. கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்.
from tkn