20க்கு 20 உலக கிண்ணம் குறித்து இறுதி முடிவு எடுக்காத ஐசிசி

போட்டி அட்டவணைப்படி எங்களது திட்டம் தொடரும் என்று ரி 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி தெரிவித்துள்ளது.

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ம் திகதி முதல் நவம்பர் 15-ம் திகதி வரை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கிண்ண போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ம் திகதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐ.சி.சி. போர்டு நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரி 20 உலகக் கிண்ணம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐசிசி அதன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐசிசி ரி 20 உலக கிண்ணம் மற்றும் மகளிர் 50 ஓவர் உலக கிண்ணம் ஆகியவற்றிகான தற்செயல் திட்டங்களை தொடர்ந்து ஆராயும். போட்டி அட்டவணைப்படி இரண்டு தொடர்களுக்கான திட்டம் தொடரும்’’ எனப் பதிவிட்டுள்ளது.

இதனால் இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது சுகாதார நிலை மேம்பட்டு வருகிறது. ஆனால் பயண கட்டுப்பாடு, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகள், இரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது போன்ற காரணங்களால் ஐ.சி.சி. திணறி வருகிறது. 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை