கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே பரவ ஆரம்பித்திருக்கலாம் என்று செய்மதிப் படங்களை ஆதாரமாகக் கொண்டு புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
வூஹான் நகரின் ஐந்து மருத்துவமனைகளில் கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் டிசம்பர் வரை மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதை செய்மதிப் படங்கள் காட்டுவதாக ஹார்வார்ட் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதே காலப்பகுதியில் இணையதளங்களில் சீனர்கள் ‘இருமல்’ மற்றும் ‘வயிற்றுப்போக்கு’ போன்ற நோய் அறிகுறிகள் பற்றி அதிகம் தேடியுள்ளனர். எனினும் இந்த ஆய்வு ‘அபத்தமானது’ என்றும் ‘மேலோட்டமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது’ என்றும் சீனா சாடியுள்ளது.
இருப்பினும், இந்தத் தகவல்களைக் கொண்டு சீனாவில் நோய் முன்னதாகவே பரவியுள்ளது என்ற முடிவுக்கு வரமுடியாது என ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
தற்போது சீனா கொவிட்-19 நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும் மற்ற நாடுகளில் நோய்ப் பரவல் இன்னும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn