பிரதமருடன் TNA பிரத்தியேக சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (04) பிற்பகல் விஜயராம மாவத்தையிலமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.
நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் காணப்படும் சட்ட நடைமுறைமைகளை ஆராய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதன்போது உறுதியளித்ததாகவும் அவர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும் சாத்தியம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதாக வாக்குறுதியளித்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், உள்ளிட்ட கட்சி முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், பிரதமருடன், பசில் ராஜபக்ஷ, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதிகளில் வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும் கோரப்பட்டதோடு இது குறித்தும் கவனிப்பதாக பிரதமர் உறுதியளித்தாக அறிய வருகிறது. (பா)
ஷம்ஸ் பாஹிம்
from tkn