ஆட்டோவுக்கு தீ வைத்ததாக இருவர் கைது

பெற்றோல் திருடியபோது சம்பவம்

ஹட்டனில் முச்சக்கரவண்டியொன்றுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை, சி.சி.ரி.வி. கமெராவின்  உதவியுடன் கைது செய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு நேற்று (11)  அதிகாலை 4.00 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள சி.சி.ரி.வி. கமெராவின்  காணொளி பதிவினை வைத்து  இச்சந்தேகநபர்களை இன்று (12)  ஹட்டன்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது,  குறித்த முச்சக்கரவண்டியிலிருந்து அவசர தேவைக்காக பெற்றோல் திருடியதாகவும் அதன் பின்னர் பெற்றோல் தாங்கியினை சரிசெய்வதற்காக  தீக்குச்சியினை பற்ற வைத்து ஒளியினை பெற்றபோதே முச்சக்கரவண்டி    தீ பற்றியதாகவும் இந்நிலையில் அங்கிருந்து தாங்கள் தப்பியோடியதாகவும்  சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - எம்.கிருஸ்ணா)

 

Tue, 05/12/2020 - 13:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை