அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் காலம் இது

அனைத்து இன,மதத்தினரும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் காலம் இது

உலகளவிலும் நாட்டிலும் போயா தினத்தை விடுமுறை தினமாக்க உழைத்த வீரர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

இனம், மதம் என பிரிந்து செயற்பட்டாலும் அனைவரும் ஒரே நோக்கமுள்ள மனிதர்கள் என்பதை உணரும் இச்சந்தர்ப்பத்தில் பௌத்த மதத்தின் உயர் பிரார்த்தனையான அனைத்து உயிர்களும் சுகமாக வாழ்க.ஆரோக்கியமாக வாழ்க என பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற அரச வெசாக் தின விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தபெருமானின் பிறப்பு  துறவுநிலை,பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் இந்த  தினத்தை உலகின் உன்னதமான நாளாக உலகளாவிய பௌத்த மக்கள் கருதுகின்றனர்.

எமது உயரிய பாரம்பரியத்தின் படி ஒருவர் தமது வயதை மதிப்பிடுவதும் வெசாக் போயாவை கணித்துதான். அதேபோன்று எதிர்காலத்தை குறித்து கணிப்பதும் வெசாக் போயாவை முன் கொண்டு தான்.

புத்த தர்மத்தை பாதுகாக்கும் அரசாங்கம் எப்போது வரும் என்று என்னிடம் கேட்டபோது அதற்கு நானும் வெசாக் போயா தினத்தை கணித்தே பதில் சொன்னேன். இப்போது அந்த வெசாக் போயா உதயமாகியுள்ளது.

வெசாக் போயா பௌத்தமக்கள் மட்டுமன்றி உலகின் பல மதங்களை இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் கௌரவத்துக்குரிய தினமாகும். அதனால் இந்த தினம் உலக விடுமுறை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. வெசாக் போயா தினத்தை உலக விடுமுறை தினமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தவர் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆவார்.

அதேபோன்று இலங்கை ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்த போது வெசாக் தினத்தை அரசு விடுமுறை தினமாக பிரகடனப் படுத்துவதற்கு யோசனைகளை முன் வைத்தவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன் தான். பௌத்தர்களாகிய எமது சுபாவம் நன்றி மறவாததே. அந்த வகையில் உலக அளவிலும் நாட்டிலும் போயா தினத்தை விடுமுறை தினமாக்க உழைத்த அந்த வீரர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

சிலர் கொரோனா வைரஸ் இயற்கை மூலம் உலக மக்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையென நினைக்கின்றார்கள். இதனால் அவர்கள் உண்மைக்கு மதிப்பளிப்பதை விட வைரஸ் ஒழிப்பு செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்குவது தெரிகிறது.

எனினும் புத்த தர்மத்தை பின்பற்றும் நாம் எருக்கும் தண்டனை வழங்கப் போவதுமில்லை. அதேபோன்று தண்டனை வழங்கும் பாவமான சிந்தனையிலிருந்து நாம் விலகி இயற்கை வழங்கிய தண்டனை இது என இதை நாம் கூறப்போவதுமில்லை.

இதுதான் உலகின் இயற்கை.இயற்கைக்கு உலகில் பலமானவர் பலவீனர் என்ற வேறுபாடு கிடையாது. உலகில் எந்த பலம் படைத்தவர்களாலும் இயற்கையை மாற்ற முடியாது. இனம், மதம் என்றில்லாமல் மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது.

இந்த வைரஸ் அச்சுறுத்தலில் வறுமை நிலையில் உள்ளவர்களும் உலகிலுள்ள செல்வந்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்களால் கூட இந்த வைரஸிலிருந்து விடுபட முடியாமலுள்ளது. இயற்கையை மாற்ற நினைத்தவர்களும் அதன்முன் சரணடைந்து நிற்கின்றனர்.

இந்த வெசாக் தினத்தில் மட்டுமன்றி எதிர்காலத்திலும் நாம் அனைவரும் ஒரே மனிதர்கள் என சிந்திக்க வேண்டும் பௌத்தர்களாகிய நாம் உலகில் முதன்முதலில் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்தோம் இக்காலங்களில் சகல மதத்தவர்களும் சகல இனத்தவர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்க நேர்ந்துள்ளது.

கத்தோலிக்க சமயத்தவர்கள் அவர்களது மத திருநாட்களை அனுசரிக்காமல் நிறுத்தி பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதேபோன்று இந்து மக்களும் முஸ்லிம் மக்களும் தம்மாலான அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இனம் மதம் என்ற ரீதியில் நாம் செயற்பட்டாலும் நாம் அனைவரும் பொதுவானவர்கள். மனிதர்கள் என இந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்து செயல்படுகின்றோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/07/2020 - 13:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை