சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்
தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் தென்மராட்சிப் பகுதியில் கசிப்பு உற்பத்தியானது பெருமளவில் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளும் பூட்டப்பட்டு இருப்பதன் காரணமாக தென்மராட்சிப் பகுதியில் அதாவது மட்டுவில், கெடுடாவில், மறவன்புலவு, சரசாலை போன்ற கிராமங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் பற்றைகளுக்குள்ளும், ஆட்கள் இல்லாத வீடுகளிலும் கசிப்பு உற்பத்தி பெருமளவில் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் பெருமளவு கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு அதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கின்றார்கள்.
எனினும் அது இன்றுவரை முற்றாக நிறுத்தப்படவில்லை. எனவே இந்த கசிப்பு உற்பத்தியினை நிறுத்துவதற்கு தென்மராட்சி இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த கசிப்பு உற்பத்தியினை தென்மராட்சியில் முற்றாக ஒழிக்க முடியும் என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்
from tkn