அம்பாறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி; நால்வரிடம் தண்டம் அறவீடு

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான செயற்பாட்டில் கைதான நால்வரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ. செல்வகுமார் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம்  அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (5) மாலை மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நான்கு சந்தேக நபர்கள் கைதாகியதுடன்  இன்று (6) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு சந்தேக நபரிடம் இருந்தும் தலா 7 ஆயிரம் வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர்களில் வாச்சிக்குடா, தாண்டியடி, விநாயகபுரம், பகுதியில் 4 சந்தேக நபர்களும் கைதானதுடன் இதில் பியர் போத்தலை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டிற்காகவும் மற்றுமிருவர் கசிப்பு வடித்தமை மற்றும் வடித்திருந்த கசிப்பை தம் வசம் வைத்திருந்தமை மேலும் ஒரு சந்தேக நபர் கசிப்பு வடிப்பதற்கான மூலப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு  தொடர்பாகவும் கைதாகியுள்ளனர்.

இதன் படி  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில்   கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில்  அம்பாறை மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா மதுவரி பரிசோதகர்  ரி.நளீதரன்  உள்ளிட்ட சக உத்தியோகத்தர்கள்  இச்சந்தேக நபர்களை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திருக்கோவில் காஞ்சிரங்குடா  ஆலையடிவேம்பு பகுதிகளில் இன்று (6) இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான செயற்பாட்டில் ஈடுபட்ட கைதான நால்வருக்கு பிணை வழங்கப்பட்டது. எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக  பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் குறிப்பிட்டார்.

பாறுக் ஷிஹான்

Wed, 05/06/2020 - 16:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை