- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட அன்னாரின் பூதவுடல் நேற்று (29) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை அன்னாரின் ஆத்ம சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.
நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டன.
ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை (31) மாலை 4.00 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
(ஹட்டன் சுழற்சி நிருபர் –ஜி.கே. கிருஷாந்தன்)
from tkn