கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் 

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம். எதிர்வரும் காலங்களில் அதனை பாராளுமன்றம் கூட்டப்பட்டவுடன் நிறைவேற்றி தருவேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.  

அம்பாறை மாவட்டம் கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் இளைஞர்களை செவ்வாய்க்கிழமை (26) மாலை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் தனது கருத்தில், 

கடந்த காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையானது கடந்த அரசாங்கத்தில் மக்களின் நலத்திற்கேற்ப முயற்சிகள் எவையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.அரசியலிலோ சரி மக்களின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் எவ்வித முன்னேற்ற நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. இதை மக்களாகிய நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். இதை தான் நானும் கூறிக்கொண்டு வருகின்றேன்.அம்பாறை மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவம் தொடர்பான வேலைவாய்ப்பில் தமிழ் மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.   அதே போன்று விவசாயம், குடி நீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்பன தீர்க்கப்படாமல் காணப்படுகிறது. இவற்றை கடந்த பத்து மாதங்களாக அம்பாறை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று அவதானித்து வருகின்றேன். இதில் பல மக்கள் பிரச்சினைகளை தீர்த்துள்ளேன்.   அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைத்து அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களுடைய கலாசார சீரழிவு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.  

கடந்த ஆட்சி காலத்தில் தமிழ் மக்களது புரையோடிப்போன பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த வாய்ப்பு போன்று இனி ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரலசைத்தால் கடந்த ரணில் தலைமையிலான ஆட்சியை மாற்றக் கூடிய இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தது என்றார்.

Thu, 05/28/2020 - 17:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை