பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்படி மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி மற்றும் மண்சரிவுக்கான முன் அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி காணப்பட்ட காலி மாவட்டத்தில் பத்தேகம, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல,மாவத்தகம,கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ, நுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள பிரதேசங்களில் மண்சரிவு,குன்றுகள் சரிதல், பாறைகள் உருளுதல் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறலாம் என்றும் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோன்று காலி மாவட்டத்தில் காலி, அக்மீமன, எல்பிட்டிய தியகம, போப்பே போத்தல, நாகொட மற்றும் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகள் மண்சரிவு அபாய வலயங்களாகவும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவு இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொடை, குருவிட்ட, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை பாலில்தனுவர, புலத்சிங்கள வலல்லாவிட, ஹொரணை இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் பிட்டபத்தர மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்கபுர, கேகாலை மாவட்டத்தில் அரனாயக்க எட்டியாந்தோட்டை, தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தில் கங்க இஹலகோரள மற்றும் தும்பனே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மண்சரிவு எச்சரிக்கை பிரதேசங்களில் வாழும் மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தரையில் வெடிப்பு, சுவர்களில் பிளவு உள்ளிட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அடையாளங்களைக் கண்டால் அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sun, 05/17/2020 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை