- கடற்றொழில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை
- இன்று முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு
கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் கடும் மழை அல்லது இடியுடன் மழை ஏற்படலாம் என்பதோடு, காற்றின் வேகம் உடனடியாக மணிக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்பதால், கடலின் அலை திடீரென கொந்தளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் அலை உயரும் வாய்ப்பு
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2 - 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதோடு, இதன் காரணமாக, அலைகள் கரையை நோக்கி அதிக தூரம் வர வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மழை
நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரை கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.'
அத்துடன் நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடல் பிரதேசத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:
மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளுக்கு செல்லாதிருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இக்கடல் பிரதேசங்களில் கடற்றொழிலுக்காக சென்றவர்கள் உடனடியாக பாதுகாப்பான நிலப் பிரதேசத்திற்கு திரும்புமாறு அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருத்தல்.
நிலப் பிரதேசத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
மலையக பிரதேசங்களில் குறிப்பாக நிலச் சரிவு அபாயம் கொண்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கவும்.
வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருத்தல்
அவசர நிலைமைகளின்போது, பிரதேசத்திற்கு பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் உதவியை பெறல்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
from tkn