இனந்தெரியாத பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம்

செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் நேற்று (27)  இடம்பெற்ற வெடி விபத்தில் சிறுவர்கள் இருவர் காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 07 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவர்கள் இருவரும், இனந்தெரியாத பொருள் ஒன்றை எடுத்துச்சென்று சுத்தியல் ஒன்றினால் அதனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த பொருள் திடீர் என்று வெடித்துள்ளது.

இதனால் காயமடைந்த சிறுவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் சனாஸ் (12), முகமட் ராசித் (16) ஆகிய சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா நிருபர்)
 

Thu, 05/28/2020 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை