ஊரடங்கில் நாளை கொழும்பு, கம்பஹாவில் இயல்பு வழமைக்கு; எவ்வாறு?

ஊரடங்கில் நாளை கொழும்பு, கம்பஹாவில் இயல்பு வழமைக்கு; எவ்வாறு?-Steps to Bring Back Lives to Normalcy in Colombo-Gampaha

நாளை (11) கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும், ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு நிலை, நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவருதல் இடம்பெறும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான பல்வேறு நடைமுறைகளை கையாளுமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் கொள்கைகளின் அடிப்படையில், மக்களின் இயல்வு வாழ்க்கையை மீளக் கொண்டு வருதல், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடமைக்கு சமூகமளித்தல்/ வீடு திரும்புதல்
நிறுவனங்களின் பிரதானிகளால் எடுக்கப்படும் முடிவுக்கு அமைய, சமூகமளிக்க வேண்டிய அரசாங்க ஊழியர்கள் நாளை (11) காலை 8.30 மணிக்கு முன்னர் தங்கள் பணியிடத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்பதோடு, தனியார் பிரிவின் கடமைகள் முற்பல் 10.00  மணிக்கு ஆரம்பமாகவுள்ளதால், அவர்கள் தங்களது பயணங்கள் மற்றும் வாகனங்களை 8.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் தங்களது கடமைக்குச் செல்வார்கள். அரச ஊழியர்கள் பிற்பகல் 3.00 மணிக்கும் 4.00 மணிக்கு இடையிலும், தனியார் துறையினர் பிற்பகல் 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடையில் மீண்டும் வீடு திரும்ப பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நேரங்களுக்கு ஏற்ப நீங்கள் பயணம் செய்வீர்களானால், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன சோதனையிடுதல் போன்றவற்றிற்கு வசதியாக அமையும் என அவர் தெரிவித்தார். ஆயினும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த விதி கிடையாது என அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிப்பட்ட தேவைக்கு செல்ல முடியாது
அத்துடன் தனியார் வாகனத்தில் தமது அலுவலகத்திற்கு செல்வோர், அதனை உறுதிப்படுத்த வேண்டும் அத்துடன் தனிப்பட்ட விடயங்களுக்காக மேல் மாகாணத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாறு செய்தல் ஊரடங்கு உத்தரவை மீறும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்
இதேவேளை, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி கொவிட்-19 கட்டுப்படுத்தல் குறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்துமாறு தெரிவித்த அவர், அதனை சுகாதார அமைச்சின் இணையத்தளதிலிருந்து தரவிறக்கி பெறுமாறும் தெரிவித்தார்.

வாகனத்தில் பயணித்தல்
முச்சக்கர வண்டி, வாடகை வாகனம் அல்லது பொது போக்குவரத்து ஆனது (முச்சக்கர வாகனத்தில் இரண்டு பேர் மற்றும் மோட்டார் காரில் மூன்று பேர்) தனிமைப்படுத்தல் விதிகளுக்கு இணங்க அமைய வேண்டும். நிறுவனத்தின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதற்கு அமைய, தங்கள் ஊழியர்களை நிர்வாக மாவட்டத்திற்கு உள்ளேயே இருந்து வரவழைக்க வேண்டும் என்பதோடு, அத்தியாவசியம் எனின் மாத்திரம் வெளி மாவட்டத்திலிருந்து ஊழியர்களை அழைத்துக் கொள்ளலாம். அனைத்து அரச அல்லது தனியார் ஊழியர்களும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆளடையாள அட்டையை வைத்திருத்தல் கட்டாயமாகும் என்பதோடு, குறித்த நாளில் அலுவலகத்திற்கு சமூகம் தர வேண்டும் என்பது தொடர்பில் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனுமதியை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது வேறு ஆதாரங்களை காண்பிப்பது அவசியமாகும்.

உணவகங்களுக்கு அனுமதி இல்லை
வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கட்டுமான துறையில் உள்ளவர்கள் செயற்படலாம். சிகையலங்கார நிலையம், அழகுக்கலை நிலையங்களை அப்பகுதியின் சுகாதார அதிகாரியின் அனுமதியுடன் திறக்க முடியும். அதேபோல், சமைத்த உணவு விற்பனை நிலையங்கள் (உணவகங்கள், தேநீர் கடைகள், பழச்சாறு உள்ளிட்ட உணவுகளை தயாரித்து வழங்கும் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி இல்லை.

ஒன்லைன் உணவகங்களுக்கு அனுமதி
இடங்களுக்கு உணவு விநியோகம், ஒன்லைன் அடிப்படையிலான உணவு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்குமிட வசதி கொண்ட ஹோட்டல்களை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய நடாத்திச் செல்ல முடியும் என்பதோடு, அங்கு தங்கியிருப்போருக்கு உணவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெஸ்டுரண்ட் (Restaurant) வகை உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

அனுமதிக்கப்படும் கடைகள், நிலையங்கள்
உற்பத்தி நிலையங்கள், சாதாரண கடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய இடங்களை சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் திறக்கலாம் என்பதோடு, உடல் பிடித்து விடும் நிலையங்கள், வாரந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், கழகங்களை திறக்க அனுமதிக்கப்படமாட்டாது. தனியார் வைத்திய நிலையங்களை திறக்க முடியும் என்பதோடு, குறிப்பாக பெதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அத்துடன், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி அதனை திறக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

வாராந்த, நாளாந்த சந்தைகள் உள்ளிட் பலர் ஒன்றுகூடும் இடங்களை திறக்க அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார்.

அத்தகைய நிறுவனங்களை திறந்தால், தனிமைப்படுத்தல் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கருதப்பட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அடையாள அட்டை இறுதி இலக்கம் அமுல்
முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை முறையின்படி, அத்தியாவசிய மருந்துகளை (மருந்துகள் மற்றும் உணவு) கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் தமது  நிரந்தர வசிப்பிடத்திலிருந்து செல்லலாம்

இவ்வாறு சேவைகளை பெறுவதற்காக வெளியில் செல்பவர்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நாளைய தினம் (11), இறுதி இலக்கம் 1 அல்லது 2 ஆக உள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை கொண்டவர்கள் வெளியில் செல்லலாம் என்பதோடு, பொது போக்குவரத்து மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என்பதால், தமக்கு அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம் என அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் தனிமைப்படுத்தல் விதிகளின்படி வழக்குத் தொடரப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

வரிசையில் நின்று சேவை பெறல்
வரிசையில் நின்று சேவை பெறும் நடவடிக்கைகளான, கட்டணப்பட்டியல் செலுத்துதல், பொருட்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, சமூக இடைவெளி பேணப்படுவதற்கு, நிறுவனத் தலைவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்.

சுகாதார வழிமுறைகளை பேணுதல்
குறித்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வரிசையில் நிற்பது தொடர்பில் அடையாளப்படுத்தல்களை காண்பிக்க வேண்டும் என்பதோடு, கைகளை கழுவுதல் உள்ளிட்ட விடயங்களுக்கான வசதிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படாத நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

அத்துடன், உங்கள் அலுவலகம், உங்கள் நிறுவனம், உங்கள் தொழிற்சாலை, உங்கள் போக்குவரத்து சேவை ஆகியவற்றில் கிருமி நீக்கி போன்றவற்றை வைத்து பேணுவதன் மூலம் அடிக்கடி கிருமீ நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும்.

சோதனையிடப்படும்
இது தொடர்பிலான விதிமுறைகள் பேணப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வரும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

10,000 பொலிஸார் கடமையில்
அத்துடன் நாளையதினம் மேல் மாகாணத்தில் 10 ஆயிரம் பொலிஸார் சீருடையிலும், சிவில் உடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவிதார்.

பொதுப் போக்குவரத்து
பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறும், பஸ்களில், புகையிரதங்களில் கைகளை சுத்தப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், திரவங்களை வைத்திருத்தல் உகந்தது என அவர் தெரிவித்தார்.

வெப்பநிலை பரிசோதனை
தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணி புரிபவர்களின் வெப்பநிலையை அடிக்கடி அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தமது அலுவலக பணிகளுக்கு செல்பவர்கள் அங்கிருந்து திரும்புபவர்களுக்கு, வாடகை வாகனங்களில் செல்ல முடியும் என்பதோடு, தனிமைப்படுத்தல் விதிகளை பேணுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 05/10/2020 - 21:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை