தேர்தலில் தம்மை பாதுகாக்கவே கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது

காணாமல் போனோரது உறவினர்கள் குற்றச்சாட்டு

அரசியல் வெறுமையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் என தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்கள் நேற்று தமது போராட்ட தளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்ஷசவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மேலும் கூறுகையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தினை வடக்கு கிழக்கில் ஆரம்பித்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்துடன் முண்டு கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மகிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார் என மக்களுக்கு அச்சமூட்டினர். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதனையே கூறியிருந்தனர். சம்பந்தன்,  சுமந்திரன் ஆகியோர் தமது நண்பரான ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பாடிய பாடலையே கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும் மகிந்த முன்னிலையில் பாடியுள்ளனர். அந்த பாடலின் பொருளானது உள்நாட்டு விசாரணையும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கான மூலப்பொருளை பெற்றுக்கொள்வதற்கானதாகவே  இருக்கின்றது.

இது தந்தை செல்வாவின் அரசியல் அல்ல. தமிழ் மக்களின் முக்கிய நாளில் மீண்டும் தமிழ் மக்களின் காதுகளில் கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகமே ஒலிக்கின்றது.

அதுமாத்திரமின்றி மகிந்த ராஜபக்ஷவிடம் கூட்டமைப்பினர் ஒரு கோவையை கொடுத்துள்ளனர். அது என்னவென்று தெரியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய நிறைவேற்றக்கூடியதாக இருந்த விடயங்களை இந்த ஆட்சிக்காலத்தில் கொடுத்துள்ளமை நகைப்புக்குரியதே.

அவர்களுக்கு அரசியல் வெறுமையோன்று தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வெறுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் தமது பதவிகளை  பெற்றுக்கொள்வதற்காகவும் தேர்தல் நேர போலி பிரசாத்திற்காகவுமே காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களை மீண்டும் கூட்டமைப்பினர் கையில் எடுத்துள்ளனர் என்றார்.

வவுனியா விசேட நிருபர் 

Wed, 05/06/2020 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை