திருக்கோவில் பிரதேசத்தில் அரசகாணிகளை அரசகாணிக் கட்டளைச் சட்டத்திற்கு முரணாக பொருத்தமற்ற நபர்களுக்கு பகிர்ந்தளிக்க எந்தவொரு ஏற்பாடும் எமது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படவில்லையென திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் விடுத்துள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக சில சமூக வலைத்தளங்களில் திருக்கோவில் தங்கவேலாயுத புரத்தில் அரச காணிகள் பொருத்தமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளிவந்திருந்தன.
அது தொடர்பாக சரியான தகவலை தெரியப்படுத்தவே இவ் விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கொரோனா தொற்றுக்காரணமாக நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கருதி ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக தரிசு நிலங்களாக கைவிடப்பட்ட வெற்றுக் காணிகளையும் வளவுகளையும் விவசாயப் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
அதனோடு இணைந்ததாக கிராமசக்தி வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் அரச காணியில் மக்களை விவசாய உற்பத்தியிலீடுபடுத்துவதற்கான நடவடிக்கையும் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு என்மீதும் அரசின் மீதும் களங்கத்தை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். அதற்கு மாறாக அநீதியான முறையில் எதுவும் நடைபெறாது என்பதை இத்தால் தெரியப்படுத்துகிறேன்.
காரைதீவு குறூப் நிருபர்
from tkn