பிரதமருடன் சுமந்திரன் திடீர் சந்திப்பு

பிரதமருடன் சுமந்திரன் திடீர் சந்திப்பு-MA Sumanthiran Meets PM Mahinda Rajapaksa

- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; ஆக்கபூர்வமானநடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி
- ஜனாதிபதியுடன் பேசுமாறும் சுமந்திரனுக்கு அறிவுறுத்தல்
- புதிய அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பின் ஆதரவு அவசியமெனவும் பிரதமர் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம். ஏ சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான  கலந்துரையாடல்   நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர், சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.

பிரதமருடன் சுமந்திரன் திடீர் சந்திப்பு-MA Sumanthiran Meets PM Mahinda Rajapaksa

இதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணத்தின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றை சுமந்திரன் நேற்று பிரதமரிடம் கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவுக்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசுவதாகவும்  சுமந்திரனையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர், ஏனையோர்  தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில்  சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர், தாம்  புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில்  ஜனாதிபதியும் இதனை உறுதி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகுமெனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்குமென தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், நீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு  முன்னுரிமை  கொடுக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

Wed, 05/13/2020 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை