அக்கரைப்பற்று பிரதேச நெல்வயல்களில் எரிபந்தம் நோய் பரவி வருவதாக தெரிவிப்பு

அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது 2020 சிறுபோக நெல்வயல்களில் எரிபந்தம் நோய் பரவி வருவதாக, கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும், விவசாய போதனாசிரியருமான வீ. நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லில் ஏற்படும் நோய்களில் எரிபந்தம் மிகவும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். நெற் தாவரத்தின் எந்த ஒரு வளர்ச்சிப் பருவத்திலும் தொற்றக் கூடிய இப் பங்கசு இலையின் மேற்பரப்புத் தண்டின் கணுக்கள் அல்லது கதிர்கள் நெல் மணிகளின் மீது கரைகளை உருவாக்கும். எரிபந்தம் பங்கசு தண்டின் கணுக்களில் தொற்றும் போது அவ்விடம் கறுப்பு நிறமாக மாறி தண்டு அவ்விடத்தில் முறிந்து விழும். இலை மடலின் சோனை கறுப்பு நிறமாக மாறி அது இலகுவில் முறியும்.

கதிரின் கழுத்துப் பகுதியில் இப் பங்கசு தொற்றும் போது அது கறுப்பு நிறமாக மாறி முறிந்து விடும். இது கழுத்தழுகள் எனப்படும். இவைகள் நோயின் அறிகுறிகளாகும்.

எதிர்ப்புத் தன்மை கொண்ட வர்க்கங்களை செய்கை பண்ணல், சரியான அளவில் சிபாரிசு செய்யப்பட்ட பசளைகளை இடல் என்பன நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான இடத்தினை வகிக்கின்றன.

இவ் அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் உடனடியாக அதற்குத் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுள்ளார்.

நோய்த் தாக்கம் ஏற்பட்டால் அல்லது நோய்ப் பரவல் அதிகமாக காணப்பட்டால் பங்கசு நாசினியான 'டெபியுகொனசோலை' விசுருதல் வேண்டுமென, அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வூட்டப்பட்டு வருவதாகவும், மேலதிக விபரங்களை விவசாயப் போதனாசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகளை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும், விவசாய போதனாசிரியருமான வீ. நாகேந்திரன் கேட்டுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்

Sat, 05/16/2020 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை