ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு ஆகிய வர்த்தமானிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை எட்டாவது நாளாக இன்று (28) பரிசீலிக்கப்படுகின்றது.
கடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த மனு, இன்று (28) முற்பகல் 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்மனுக்களை நிராகரிக்குமாறு இடை மனுதாரர்கள் கோரிக்கை
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எட்டு அடிப்படை உரிமைகள் மனுக்களையும் நிராகரிக்குமாறும் அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாமென்றும் இடையீட்டு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தின் கலைப்பு பாராளுமன்றத்தின் இறுதியையே குறிப்பதனால் அதனை மீண்டும் கூட்ட முடியாதென இடையீட்டு மனுதாரராக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் அவசரகால நிலையொன்று உருவாகாது எவராலும் பாராளுமன்றத்தை மீளக்கூட்ட முடியாதென ஜனாதிபதி சடட்டத்தரணி தசுன் நாகசேன சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபஷ கூறினார்.
பேராசிரியர் பந்துல அந்தகம சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா மேற்படி மனுக்கலை நிராகரிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
from tkn