கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு 7.4 பில்லியன் யூரோ

உலக நாடுகள் சம்மதம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ வழங்க சம்மதித்து உள்ளன.

கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம்  ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில்  பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொளி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ வழங்க முன் வந்துள்ளன.

இந்த முயற்சிக்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரவேற்பு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கடந்து செல்வதற்கு வரலாற்றில் மிகப்பெரிய பொது சுகாதார முயற்சி தேவைப்படும். இது ஒன்றுடன் ஒன்று இணைந்த உலகம். நாம் அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரையில்  நம்மில் யாரும் பாதுகாப்பாக இருந்து விட முடியாது.

புதிய கருவிகள்  கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலகிற்கு முழுமையாக உதவக்கூடும். இதை உலகளாவிய பொதுப்பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தேவையான நிதி திரட்டும் இந்தக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவும்  சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 05/07/2020 - 14:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை