அம்பன் புயல் தாக்கம் காரணமாக யாழில் 66 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அம்பன் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது.

யாழில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நெடுந்தீவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேரும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 50 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன்  காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 05/20/2020 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை