திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சகோதரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப் பரிதாப சம்பவம் இன்று (10) கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (10) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ரணீஸ் முஹம்மது ஷான் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளார் .
இவரது சகோதரான 2 வயதான ரணீஸ் முஹம்மது தாஜ் எனும் சிறுவன் படு காயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உடைக்கப்பட்ட பழைய வீடொன்றின சுவருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது அவ்வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்து மரணம் தொடர்பில் கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், திருமலை மாவட்ட விசேட நிருபர் - ஏ.எம்.ஏ. பரீத்)
from tkn