மலேசியாவிலிருந்து மற்றுமொரு குழு வரவுள்ளது
கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 272 பேர், இன்று (10) காலை மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை 6.12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.
அத்தோடு, அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினாலும், சோதனை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் மலேசியாவிலிருந்து மற்றுமொரு குழுவினர், ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
from tkn