ஊரடங்கை மீறிய 22,591 பேர் மீது வழக்குத் தாக்கல்

- 66,662 பேர் கைது; 18,778 வாகனங்கள் கைப்பற்றல்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 66,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 18,778 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (29) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அத்தோடு, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22,591 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 9,067 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நேற்றிரவு  (28)  10.00 மணி முதல், இன்று (29) அதிகாலை 4.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 45  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

Fri, 05/29/2020 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை