180 நாடுகளில் உள்ளது போன்று அடக்கம் செய்ய அனுமதிக்கவும்

180 நாடுகளில் உள்ளது போன்று அடக்கம் செய்ய அனுமதிக்கவும்-ACJU Re-appeal Letter to Anil Jasinghe on COVID19 Dead Body Burial

அனில் ஜாசிங்கவிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்து சாம்பலை வழங்காது அடக்கம் செய்ய அனுமதி தருமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு, உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி எழுதிய கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், கொவிட்-19 பரவலை தடுப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள உலமா சபை, கொரோனா வைரஸ் தொடர்பில் மரணித்தவர்களை, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க, 180 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதோடு, அதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மரணித்தவர்கள் தொடர்பில், தமது மத நம்பிக்கை மற்றும் மத கடமைகளை நிறைவேற்றும் வகையில் இதற்கான அனுமதியை வழங்குமாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள உலமா சபை, சட்ட வைத்திய அதிகாரியினால் (JMO) வழங்கப்பட்டுள்ள குறித்த நடைமுறையில் திருத்தம் செய்யுமாறு, கடந்த மார்ச் 24ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை கருத்திற்கொண்டு, கொவிட்-19 காரணமாக மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை உள்ளடக்கிய வழிகாட்டல் ஒன்றை மார்ச் 27 இல் வழங்கியிருந்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளது.

"ஆயினும் கடந்த மார்ச் 31ஆம் திகதி குறித்த வழிகாட்டல்களில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு, அடக்கம் செய்யும் தெரிவு நீக்கப்பட்டிருந்தது."

"அது தொடர்பில், ஏப்ரல் 01ஆம் திகதி அறிக்கையொன்றின் மூலம், நாம் முஸ்லிம் சமூகம் சார்பில் எமது கவலையை வெளியிட்டிருந்ததோடு, அம்முடிவை மாற்றுமாறு தெரிவித்ததோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்ய அனுமதி கோரியிருந்தோம். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் ஆராய, மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு, விஞ்ஞான ரீதியாக ஆராயும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆயினும் அது இடம்பெறவில்லை."

"நாம் ஒரு  பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில், நாட்டின் சட்டத்தை எப்போதும் கடைப்பிடிக்குமாறு நாம் எமது சமூகத்திற்கு வழிகாட்டி வந்துள்ளோம்."

"இந்நிலையில், கொவிட்-19 மரணத்தவர்களை தகனிப்பது மாத்திரமே அனுமதிக்கப்படும் எனவும், இதன்போது கிடைக்கும் சாம்பலை வழங்க முடிமானால் அதனை புதைக்க முடியும் என எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது."

"நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படுவதும், அதை நோக்கி மக்களை வழிநடத்துவதும் நமது தார்மீக மற்றும் நெறிமுறைக் கடமையாகும். ஆனால் இம்முடிவை நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்பதற்கு அப்பால் அது எமது மதக் கொள்கைகளுக்கு எதிரானதாகும். ஆயினும், இந்த விடயத்தில் அதிகாரிகளுக்கு நெறிமுறை முயற்சிகளை வழங்குவதற்கான பிரதிநிதித்துவத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம்."

"உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமையவும் 180 நாடுகளில் பின்பற்றப்படுகின்ற வகையிலும், கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை வழங்குமாறு நாம் மீண்டும் கோரிக்கை விடுப்பதோடு, பொதுச் சுகாதார பரிசோதர் மற்றும் பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம் அதற்கான அனுமதியை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்."

எனவே இது மிகவும் உணர்வுபூவர்மான விடயமாக காணப்படுவதால், இக்கோரிக்கையை மீண்டும் விடுப்பதோடு, அடக்கம் செய்வதற்கான கிடங்கை 8 அடி வரை தோண்டுவது, வேண்டுமாயின் சீமெந்தினால் கொங்கிறீட் இடுவது அல்லது அது தொடர்பான ஏனைய விடயங்களை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வோம் என, உறுதியளிப்பதாக உலமா சபை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Fri, 05/08/2020 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை