பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்காக மலையகத்தில் தேவாலயங்கள், ஆலயங்களில் வழிபாடு

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்தில் நேற்று ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார். ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார். இதன்படி மலையகத்திலுள்ள தேவாலயங்கள், ஆலயங்கள், வீடுகளில் நேற்று விசேட ஆராதனைகள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களுக்காக வழிபாடுகள் இடம்பெற்றன.

மிகவும் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியே வழிபாடுகள் இடம்பெற்றன. ஒரு சிலரே இவற்றில் பங்கேற்றிருந்தனர். அதேபோல் பெரும்பாலான மக்கள் வீடுகளில் விளக்கேற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர். கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் உடல்சிதறிப் பலியாகியதுடன், 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி, விசேட நிருபர்கள்)

Wed, 04/22/2020 - 08:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை