சுகாதார திணைக்கள விதிமுறைகளை பின்பற்ற வர்த்தகர்களுக்கு வலியுறுத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய மக்களுக்கு தேவையான வர்த்தக நிலையங்களை சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல் விதிமுறைகளுடன்  திறந்து வியாபாரம் செய்ய  அனுமதிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இச்செயலணியின் விசேட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு தளர்த்தப்படும்போது ஆடைவிற்பனை நிலையங்கள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், சில்லறை விற்பனை நிைலயங்கள், நகை விற்பனை நிலையங்கள் ஆகியன  ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரங்களில் தமது விற்னைகளில் ஈடுபடமுடியும்.  இதன்போது சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல் விதிமுறைகளான சமூக இடைவெளி, கடைக்குள் ஐவருக்குட்பட்டவர்கள் மாத்திரம்  இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வர்த்தக நிலையங்கள் தயாராக இருக்கவேண்டும்.

இந்த சுகாதார விதிமுறைளை பின்பற்ற மறுப்போரின் வர்த்தக நிலையங்களை மூடிவிடும் அதிகாரத்தினை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவ்வப்பகுதி உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியிருப்பதாக  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மேலும் தெரிவித்தார்.

இவ்விதம் திறக்கப்படும் சிகை அலங்கார நிலையங்களுக்கு வருகை தருவோர் முடிகளை அழகுபடுத்த தாமாக கொண்டுவரும் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும்.  சில்லறைக்கடைகளில் மக்களுக்கு தேவையான அளவு அரிசிகளை தட்டுப்பாடின்றியும் வைத்திருக்க வேண்டும். சிவப்பு வெள்ளை நாட்டரிசியை ஒருபோதும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல முடியாதென்றும் கீரிச்ச்சம்பா இன அரிசியினை மாத்திரம் அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்கள் சிபாரிசில் பெறப்பட்ட  பொலிஸ்  அனுமதிப்பத்திரம் பெற்று  வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியுமென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இந்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில்  மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, மேலதிக அர சாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் உட்பட செயலணியின் அதிகாரிகளும் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Mon, 04/20/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை