நீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்து ஆண் குழந்தை பலி

கொக்கட்டிச்சோலை, பன்சேனை உன்னிச்சைப் பகுதியில் 02 வயதுடைய ஆண் குழந்தையொன்று, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

பன்சேனையினைச் சேர்ந்த இந்திரகுமார் றுஸ்மிதன் (02) எனும் குழுந்தையே நேற்று (28) மாலை  இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த குழந்தை, வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதன்போது,  வீட்டு முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் குறித்த குழந்தை விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் கூக்குரல் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பணித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

(மணல்சேனை நிருபர் –நடனசபேசன் சாமித்தம்பி)

Wed, 04/29/2020 - 12:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை