திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம். சௌந்தரராஜன் தான் பிரதேச சபையினால் பெற்றுக் கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார்.
தனது ஒரு வருட சம்பளத்தை இன்றையதினம் (21) அவரது சகோதரரான எம். சிவஞான மூர்த்தியினால் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸிடம் கையளிக்கப்பட்டது.
மூதூர் பிரதேச சபையில் 1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றியபோது இவர் பெற்றுக் கொண்ட ஒரு வருட பணத்தை கொரோனா தொற்று காரணமாக வறுமையில் மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கிலே இப்பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாட்டாளிபுரம், வீரமாநகர், இலக்கந்தை, மீனாகேணி மற்றும் நல்லூர் ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப்பணம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸ் தெரிவித்தார்
(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)
from tkn