- புத்தளம் பிரிவில் 19 பேருக்கு கொரோனா அடையாளம்
- புத்தளம் ஸாஹிராவில் 82 பேர் தனிமைப்படுத்தலில்
புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தோனேசியாவிற்கு சென்ற குறித்த நபர், மார்ச் மாதம் 16ஆம் திகதி புத்தளத்திற்கு வந்த நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் படி 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.
அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் போது மார்ச் மாதம் 28 திகதி சுகவீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் , மேலதிக பரிசோதனைக்காக அன்றைய தினமே குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதன்போது, அவர் கொவிட்19 நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குருணாகல் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் பூரணமாக குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை (10) வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வீட்டுக்கு வருகை தந்துள்ள குறித்த நபரை, மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக புத்தளம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் தெரிவித்தார்.
புத்தளம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதுடன், அதில் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளார் எனவும் அவர் ௯றினார்.
அத்துடன், புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தற்போது 82 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ஆர். ரஸ்மின்)
போலித் தகவல் தொடர்பில் புத்தளம், அல் காசிமி சிட்டி மஸ்ஜித் அறிக்கை
இதேவேளை, புத்தளம் அல் காசிமி சிட்டி தொடர்பான போலிப் பிரச்சாரங்களும் அதன் உண்மை நிலை தொடர்பாக, தாராபுரம், அல் காசிமி சிட்டி, அல் - காசிமி ஜும்ஆ மஸ்ஜித் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை வருமாறு,
கடந்த ஏப்ரல் 7ம் திகதி புத்தளம் அல் காசிமி சிட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் Covid 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டார். இது தொடர்பாக பல இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களுக்கெதிராக உண்மைத் தன்மையை தெளிவு படுத்தும் வகையில் இவ் ஊடக அறிக்கையை வழங்குகின்றோம்.
குறித்த நபர் மார்ச் 16ம் திகதி அதிகாலை இந்தோனேசியாவிலிருந்து அல் காசிமி சிட்டியை வந்தடைந்தார். அதன் பின்னர் மார்ச் 18ம் திகதி காலையில் வேன் (Van) ஒன்றின் மூலம் மன்னார் தாராபுரத்திற்கு குறித்த நபரின் மைத்துனரின் இறுதிச் சடங்குக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றார். அதேவேளை குறித்த இறுதிச் சடங்குக்காக அல் காசிமி சிட்டி பகுதியிலிருந்து சுமார் 50 பேர்களுடன் பகல் 12 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று நள்ளிரவில் மீண்டும் புத்தளம் திரும்பியது.
குறித்த சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் Covid 19 தொற்றுக்குள்ளான நபர் குறித்த பேரூந்தில் மன்னார் சென்றதாகவும், குறித்த பேரூந்தில் சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டுவருவதாகவும் போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பேரூந்தில் சென்றவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார உத்தியத்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அல் காசிமி சிட்டி பள்ளி பரிபாலன சபையினால் வீட்டு இலக்கங்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டதுடன் குறித்த நபர்களை இணங்காட்ட சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் பேரூந்தில் மரண வீட்டிற்கு சென்ற நபர்கள் இன்று வரை தங்களது வீடுகளில் இருக்கின்ற போதும் உண்மைத் தன்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் மற்றும் சகோதர மொழி ஊடகங்கள் பரப்புவதாவது எமது ஊருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைவதுடன் தவறான விம்பத்தை ஏனைய மக்களுக்கு காட்டுவதாகவும் அமைகின்றது.
எனவே வாசகர்கள், ஊடகத்துறையினர் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி மற்றவர்களுக்கு பகிருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நிர்வாகம்
தாராபுரம் அல் - காசிமி ஜும்ஆ மஸ்ஜித்
அல் காசிமி சிட்டி
from tkn