அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்-Rice Mill Operations Declared as Essential Service

மீள அறிவிக்கும் வரை அமுல்

நாட்டில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளும், ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு விநியோகம், அரிசி உற்பத்தி,களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என்பதால் அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவையாக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலைகளினதும் உரிமையாளர்கள் தாம் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லை அரிசியாக மாற்ற வேண்டும். சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட எல்லையினுள்ளும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உணவு ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தற்போது சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 2/3 பகுதி அரிசியாக உள்ளது. எனினும் அதிகளவு அரிசியின் விலையை அதிகரிப்பது அல்லது அரிசி விநியோகம் குறைவடைவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்புக்கு அதிக இடர்நிலைமையை தோற்றுவிப்பதாக அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களது வீடுகளுக்கே பொருட்களை பெற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் மிகவும் கவனமாகவும் முன்னுரிமையுடனும் செயற்படுமாறு செயலாளர் அறிவித்துள்ளார்.

ஒசுசல, பார்மசிகள் மற்றும் வங்கிச் சேவைகள் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாகவே இருக்கும்.

Fri, 04/10/2020 - 13:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை