கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
நேற்று (23) நண்பகல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து இச்சுகாதார விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டனர்
குறிப்பாக இலங்கை போக்குவரத்து பேருந்துகள் தனியார் போக்குவரத்து பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு சாரதி மற்றும் பஸ் நடத்துனருக்கு சுகாதார நடைமுறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு எச்சரிக்கையும் அவ்விடத்தில் விடுக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள பிரபல உணவகங்களுக்கு திடீரென சென்ற இக்குழுவினர், சுகாதார நடைமுறையை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், மக்களின் நலன் கருதி சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அடுத்து தனியார் கடைத்தொகுதி தனியார் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றன. வழமையைவிட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பொதுமக்களின் விகிதம் மிகக்குறைந்து காணப்பட்டதை காண முடிந்தது.
பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணியுமாறும், பஸ் வண்டியில் சமூக இடைவெளியை பேணுமாறும் கூறி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் முகக்கவசம் அணியாது பஸ் வண்டியில் பயணிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
(பாறுக் ஷிஹான்)
from tkn