மற்றையவர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தமான அம்புலன்ஸில் அக்கரைப்பற்றிற்கு அழைத்துவரப்பட்டு அவரின் வீட்டில் இறக்கிவிடப்பட்டார் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக பொலநறுவை வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று சனிக்கிழமை (25) மாலை வீட்டிற்கு மீள அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி இவர் சிகிச்சைக்காகா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மாதிரி அறிக்கைகள் வெளிவந்துள்ள இதில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் மேலும் ஆய்வுகள் திரும்பவும் மேற்கொள்ளப்பட்டு அவர் குணம் அடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடு செல்ல இன்று (25) மாலை அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளவர் வீட்டில் மேலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை சிகிச்சை பெற்று வெளியேறிய குறித்த நபரின் மனைவியும் இவ்வாறு முடிவுகள் வரும் பட்சத்தில் இவ்வாறு தான் அவருக்கும் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலன்னறுவை தம்மின்ன பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனும் பெறுபேறுகள் கிடைக்கின்ற போது நாமும் பெரும் மகிழ்ச்சி அடைவோம்.
இது தவிர அக்கரைப்பற்று 19 பகுதி தனிமைப்படுத்தல் சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் இத்தடையினை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.
(பாறுக் ஷிஹான்)
from tkn