கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி வினியோகிக்க உலகத் தலைவர்கள் உறுதி ஏற்றுள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செயல்படும் உலக சுகாதார அமைப்பு கொரோனா சவாலை சமாளிக்க ‘கூட்டுறவில் மைல்கல்’என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கான ஆரம்ப விழா உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தலைமையில் ‘வீடியோ கொன்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமாபோசா மற்றும் ஆசிய மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு பாதுகாப்பான சிகிச்சை முறைகள் பயனுள்ள பரிசோதனைகள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை முறைகள் ஆய்வு கருவிகள் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவை ஏழை பணக்கார நாடுகள் என்ற பேதமின்றி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப விழாவில் அமெரிக்கா ரஷ்யா இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவில்லை. எனினும் ‘கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்’என சமீபத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
from tkn